Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
டெல்லியில் அதிக விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 524 ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில், ஆம் ஆத்மி அரசால் கவுரவிக்கப்பட்ட பிரபல உணவு விடுதியின் அதிபர் நவ்நீதி கல்ராவை போலீஸார் தேடி வருகின்றனர். கரோனாவின் 2-வது பரவலால் டெல்லியில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
இதனிடையே, சீனாவிலிருந்து அனுமதியின்றி இறக்குமதிசெய்யப்பட்ட கான்சென்ட்ரேட்டர் கள் பதுக்கி வைக்கப்பட்டு அதிக விலைக்கு இணையதளம் வழியாக விற்கப்படுவதாக டெல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, டெல்லியில் ‘கான் சாச்சா’ எனும் பெயரிலான பிரபல உணவு விடுதிகளில் இரண்டு தினங்களுக்கு முன் சோதனை நடத்தப்பட்டது.
இதில், கான் மார்கெட் மற்றும் டவுன் ஹால் பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் 100 கான்சென்ட்ரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இங்கு கிடைத்த தகவலை அடுத்து ஹரியாணாவின் பண்ணை வீட்டில் 424 கான்சென்ட்ரேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த உணவு விடுதிகளின் உரிமையாளரான நவ்நீதி கல்ரா, டெல்லியின் மிகவும் பிரபலமானவர் ஆவார். 1972-ல் ஹாஜி பாந்தா ஹசன் என்பவரால் துவங்கி பிரபலமான கான் சாச்சா உணவு விடுதியை அவர்களிடம் இருந்து 2009 -ல் ஏமாற்றி நவ்நீதி பறித்ததாகப் புகார் உள்ளது.
மேலும், பிரபலமான இந்த உணவு விடுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காத்திருந்து ‘கபாப்' வகை இறைச்சிகளை சாப் பிடுவது உண்டு எனக் கூறப்படுகிறது. அந்த அளவுக்கு பிரபலமான இந்த உணவகத்தின் உரிமையாளரான நவ்நீதி கல்ரா உள்ளிட்ட 48 முக்கியஸ்தர்களை அர்விந்த் கேஜ்ரிவால் 2020-ல் முதல்வராகப் பதவி ஏற்ற போது சிறப்பு அழைப் பாளராக்கி கவுரவித்தார். இந்திய கிரிக்கெட் குழுவிற்கு நெருக்கமானவராகக் கருதப்படும் நவ்நீதிக்கு, கிரிக்கெட் புக்கிஸ் எனப்படும் சூதாட்டக்காரர்களுடனும் தொடர்புகள் இருப்பதாக புகார்கள் உண்டு. இப்போது கான்சென்ட்ரேட்டர்களை பதுக்கிய வழக்கிலும் நவ்நீத் தேடப்படும் குற்றவாளியாகி உள்ளார்.
இந்த பதுக்கல் தொடர்பாக டெல்லி போலீஸார் அத்தியாவ சியப் பொருட்கள் மற்றும் தொற்று நோய் சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் நவ்நீதியின் உதவியாளர்களான கவ்ரவ், சதீஷ் சேத்தி, ஹிதேஷ் மற்றும் விக்ராந்த் ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர். இவர்கள் சீனாவிலிருந்து ரூ.20,000 விலையில் ஆக்சிஜன் கான்சென்ட்ரேட்டர்களை வாங்கி அவற்றை இங்கு ரூ.70,000 வரை அனுமதியின்றி விற்பனை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.